தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு
- தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
- அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் தனது வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஆணையாளர் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை வசித்த போது உறுப்பினர் வேதாச்சலம் வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து நகரமன்ற துணைத்தலைவர் தனம், திமுக உறுப்பினர் மைசூர், சுயேட்சை உறுப்பினர் முருகன், வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் குணசேகரன் இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுக்கும் தேவையான நிதியை பெற்று அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.