உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. நிர்வாகி மர்மச்சாவு

Published On 2022-07-17 08:37 GMT   |   Update On 2022-07-17 08:37 GMT
  • சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகி மர்மச்சாவால் குற்றவாளியை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை.

சேலம்:

சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். தே.மு.தி.கவில் உறுப்பினராக உள்ளார். மேலும் மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 31-ந்தேதி பூலாவரி ஏரியில் கலையரசன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பிணத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கலையரசன் உடலில் காயங்கள் இருப்பதை அறிந்த பெற்றோர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில், தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணன், கலையரசனின் தந்தை சீனிவாசன் , தாய் புஷ்பா உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

45 நாட்கள் ஆகியும் கலையரசன் மர்மமான இறப்பு குறித்து காவல்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. பணத்திற்காக சிலர் கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News