உள்ளூர் செய்திகள்

மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

Published On 2022-06-18 14:36 IST   |   Update On 2022-06-18 14:36:00 IST
  • நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின.
  • நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சித்திரவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கின. கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்து 630 பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர்கள் தேவராஜ், சரோஜினி உள்ளிட்ட போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நாகை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர், தலைமை காவலர் தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்களையும் இட மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News