திண்டுக்கல் அரசினர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு முற்றிலும் நிறைவு
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பொதுகலந்தாய்வு மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- இந்த வருடமும் கலைக்கல்லூரிகளில் மாணவியர் சேர்க்கை அதிகளவில் இருந்தது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பொதுகலந்தாய்வு மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்திலும் 5-ந்தேதி முதல் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முதற்கட்டமாக விளையாட்டு, என்.சி.சி, முன்னாள் ராணுவத்தினர், விதவை வாரிசு, ஆகியவற்றின் மாணவிகளுக்கு முன்னுரிைம அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
அதனைதொடர்ந்து பொதுகலந்தாய்வு நடைபெற்றது. திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வை தொடர்ந்து அறிவியல், காமர்ஸ், பி.பி.ஏ, பாடப்பிரிவுகளுக்கும், அதனைதொடர்ந்து தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவியர் சேர்க்கை நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை விட கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இந்த வருடமும் கலைக்கல்லூரிகளில் மாணவியர் சேர்க்கை அதிகளவில் இருந்தது. கல்வியின் மீது கொண்ட நாட்டம் காரணமாகவும், அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் காரணமாகவும், மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என கல்லூரி முதல்வர் லட்சுமி தெரிவித்தார்.