உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

நத்தம் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2023-05-15 13:11 IST   |   Update On 2023-05-15 13:11:00 IST
  • தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பொடுகம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக சாலைவசதி கிடையாது. தற்போது மதுரை-நத்தம்-திண்டுக்கல்லுக்கு 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பரளி டோல்கேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News