கோப்பு படம்
கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
- தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பணியாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே அவரை கண்டித்தும், இடமாறுதல் செய்யக்கோரியும் 2 நாள் தொடர் போராட்டம் நடத்த இருந்தது.
இந்த நிலையில் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 30-ந்தேதி முதல் 2-ம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் காத்திருப்பு போராட்டம் ஆய்வுக்கூட்டம் நடத்துவது, ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களுக்கு சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைப்பது, மேலும் ஊராட்சி செயலர்கள் நிர்வாக அலுவலரிடம் தொடர் விடுப்பு கடிதம் அளிப்பது மற்றும் புதன்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் தொடர் விடுப்பு எடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.