உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே ஆற்றில் பிணம்: இளம்பெண்ணின் கணவரிடம் துருவி துருவி விசாரணை

Published On 2022-10-20 09:44 GMT   |   Update On 2022-10-20 09:44 GMT
  • நாங்குநேரி அருகே துலுக்கர்பட்டியில் வாடகை வீட்டில் அவர்கள் தங்கிய நிலையில் கடந்த 16-ந்தேதி ஈஸ்வரி திடீரென மாயமானார்.
  • அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன்(வயது 40). கார் டிரைவர். இவர் ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பிணமாக மிதந்தார்

மதுரையில் குடும்பத்துடன் வசித்து வந்த சுடலைக்கண்ணு சமீபத்தல் சொந்த ஊருக்கு வந்தார். நாங்குநேரி அருகே துலுக்கர்பட்டியில் வாடகை வீட்டில் அவர்கள் தங்கிய நிலையில் கடந்த 16-ந்தேதி ஈஸ்வரி திடீரென மாயமானார்.

இந்நிலையில் நேற்று அவர் நம்பியாற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது கழுத்தில் கையால் நெரித்துக்கொலை செய்யப்பட்டது போல தடம் பதிந்திருந்தது.

கணவரிடம் விசாரணை

இதனால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று மாலையில் அவரை பிடித்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர், கடந்த 16-ந்தேதி தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் அவரை காணவில்லை என்றும் கூறி உள்ளார். எனினும் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே ஈஸ்வரியின் உடல் இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் முடிவு வந்த பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News