திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
- தண்டவாளத்தில் மாடுகள் சுற்றித்திரிவதால் ரெயில் அடிபட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரில் மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை முறையாக பராமரிப்பது இல்லை. பெரும்பாலும் பாலை மட்டும் கரந்துவிட்டு மாடுகளை சாலைகளில் சுற்றவிடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் அபராதம் விதித்தபோதும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ரெயில் நிலையத்திலும் மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினசரி 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திண்டுக்கல் ரெயில்நிலையத்தை கடந்து செல்கிறது. இதனால் ரெயில்நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் பிளாட்பாரங்களில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பயணிகள் கூட்டத்தில் புகுந்துவிடுவதால் அவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும் ரெயில் தண்டவாளத்தில் அதிகளவில் சுற்றித்திரிவதால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.