உள்ளூர் செய்திகள்

கண்களில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-09-29 10:34 GMT   |   Update On 2022-09-29 10:35 GMT
  • தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.
  • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவா் பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் தி.மு.க.வைச் சோ்ந்த 9 கவுன்சிலா்கள், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 கவுன்சிலா்கள், அ.தி.மு.க.வை சோ்ந்த 4 கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் தி.மு.க.வைச் சோ்ந்த 5-வது வாா்டு உறுப்பினா் திலீப், 7-வது வாா்டு உறுப்பினா் யசோதா, 11-வது வாா்டு உறுப்பினா் பிரமிளா வெங்கடேஷ் ஆகியோா் பேரூராட்சியில் ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளதாக கூறி கண்களில் கருப்புத் துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாதாந்திர வரவு செலவு கணக்குகளை தெளிவாக சமா்ப்பதில்லை, வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை எனவும் குற்றம்சாட்டினா். இதனைத் தொடா்ந்து, மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் தெரிவித்தாா்.

இதுகுறித்து 5-வது வார்டு உறுப்பினர் திலீப் கூறுகையில், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மன்ற தீர்மானங்களை தலைவர் எந்த கவுன்சிலரிடமும் காண்பிப்பது இல்லை. மாதாந்திர வரவு செலவு கணக்குகளும் தெளிவாக காட்டப்படுவதில்லை.

தலைவரிடம் பிளம்பர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஒரு வார்டில் ஒரு மாதத்திற்கு எத்தனை புகார்கள் அட்டென்ட் செய்கிறார்கள் என்று கேட்டால் பதில் கூறுவதில்லை. மக்களின் அன்றாட பொது ப்ரிச்சனைகளை சரி செய்ய தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் தரப்பினர் கூறும் போது, பேரூராட்சியில் அனைத்து பணிகளும் சரியாக நடைபெறுகிறது. 

Tags:    

Similar News