நெல்லையில் இன்று மருத்துவ மாணவிகள் உள்பட மேலும் 83 பேருக்கு கொரோனா
- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நேற்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 70 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆகியோர் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று நெல்லை மாவட்ட பள்ளிகளில் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சென்றனர்.