உள்ளூர் செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசிய காட்சி.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறையை கண்டித்து காங்கிரசார் அறவழி போராட்டம்

Published On 2022-07-26 09:59 GMT   |   Update On 2022-07-26 09:59 GMT
  • நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது.
  • ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

நெல்லை:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இன்று 2-வது நாளாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதனை கண்டித்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு அற வழி போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்று 2-வது நாளாக சோனியா காந்தியையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி விட்டு இது போன்ற செயல்களை செய்து வருகிறது.

ஏற்கனவே கோர்ட்டு சோனியா காந்தி மீது தவறு இல்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அதிகளவு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தின் போது கவுன்சிலர்கள் அனுராதா சங்கர பாண்டியன், அம்பிகா மற்றும் பொதுச் செயலாளர் சொக்க லிங்க குமார், உதயகுமார், வெள்ள பாண்டி, மாவட்ட துணை தலைவர் கவிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News