உள்ளூர் செய்திகள்

கோவையில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நிறைவு

Published On 2023-07-04 13:14 IST   |   Update On 2023-07-04 13:14:00 IST
  • 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
  • மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளநிலை பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் உள்ள 6 இளநிலை பட்டப் படிப்புகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 756 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 79 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில், 287 விளையாட்டு வீரர்கள், 77 மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப்பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூலை 1 -ந் தேதி வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவில் 70 விண்ணப்பதாரர்களும், மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 71 விண்ணப்பதாரர்களும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முறையே 6515 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்தது.

இதன் தொடர்ச்சியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான 20 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் நிரம்பவில்லை.

மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார். வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, மீன்வளப்பல்கலைக்கழக முதன்மையர் பாலசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News