உள்ளூர் செய்திகள்

தென்னையில் நோய் தாக்குதல் எதிரொலி: பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதி திடீர் சரிவு

Published On 2024-12-23 10:14 IST   |   Update On 2024-12-23 10:14:00 IST
  • 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
  • பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-

தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.

மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News