உள்ளூர் செய்திகள்
தொழில்நுட்ப கோளாறால் சென்னை-மலேசியா விமானம் ரத்து
- தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை.
- 148 பயணிகளும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.
இதில் செலும் 148 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாக முயற்சித்தும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானத்தில் பயணிக்க வந்திருந்த 148 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு, மலேசியாவுக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.