உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் புதிய பஸ் நிலையம் கட்ட அறநிலையத்துறை நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானம் ரத்து -நகராட்சி தலைவர் அறிவிப்பு

Published On 2022-09-04 09:07 GMT   |   Update On 2022-09-04 09:07 GMT
  • 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
  • பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானம் கைவிடப்பட்டது என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் எனது தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில். என்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எண் 166 படி நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் தினம்தோறும் வந்து செல்லும் வெளியூர் மக்கள் நலன் கருதி பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி வைக்கும் நிலையில், போதிய இட வசதிகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடம், இதற்காக தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பண்பொழி சாலை அருகில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தினை பொது நோக்கத்திற்காக இந்நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடையநல்லூர் நகராட்சிக்கு வழங்குவதற்காக தீர்மானத்தினை நகர் மன்றத்தில் நானே கொண்டு வந்தேன். ஆனால் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோள் படி பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய பயன்பாடு உள்ள நிலத்தினை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News