உள்ளூர் செய்திகள்

திருமணமான மறுநாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-31 02:56 GMT   |   Update On 2023-03-31 02:56 GMT
  • மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
  • போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் சின்னகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் ரம்யா (வயது 24). இவருக்கும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஷ் என்கிற சித்திரை செல்வன் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 28-ந்தேதி தாந்தோணிமலையில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் மறுவீட்டு அழைப்பிற்காக நேற்று முன்தினம் காலை வெள்ளக்கோவிலில் இருந்து ரம்யா தனது கணவர் சித்திரை செல்வனுடன் புறப்பட்டு தனது தந்தை வீடான சின்னகிணத்துப்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் தொங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து ரம்யாவின் தந்தை அழகர்சாமி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News