வீடு புகுந்து நகை, பணம் திருடிய சிறுவன் கைது
- இரவு 9 மணியளவில் வந்து பார்க்கும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது.
- இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் தங்கராஜ் (வயது 53). தனியார் மில் தொழிலாளி. இவரது மனைவி ராமயம்மாள். அதே பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார். உறவினர் உடல்நிலை சரியில்லாத நிலை யில் இருந்ததால், தங்கராஜ், மனைவி, மகள் ஆகியோர் ஈரோட்டிற்கு பார்க்க சென்று விட்டு, இரவு 9 மணியளவில் வந்து பார்க்கும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது . இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரிக்கும் போது, அதே பகுதியில் கரும்பு வெட்டும் சிறுவன் திருடியது தெரியவந்தது.
அவனிடமிருந்து 4½ பவுன் தங்க நகை, ரூ.48 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.