உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.பிரமுகர் தினேஷ். 

கந்து வட்டியால் பா.ஜ.க.பிரமுகர் தற்கொலை : டைரி- செல்போன் உரையாடல் குறித்து தனிப்படை போலீஸ் விசாரணை

Published On 2022-07-04 08:17 GMT   |   Update On 2022-07-04 08:17 GMT
  • கந்து வட்டியால் பா.ஜ.க.பிரமுகர் தற்கொலை டைரி- செல்போன் உரையாடல் குறித்து தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் திருவேங்கடம் என்கிற தினேஷ் (வயது 21) இவர் பா.ஜ.க. நகர இளைஞரணி துணைத் தலைவராக இருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே விஷம் குடித்து விட்டு செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் பொரசக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 10,000 கடன் வாங்கியதாகவும் அவருக்கு இதுவரை கூகுள் பே மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் போட்டுள்ளதாகவும் அது மட்டும் இல்லாமல் மொபைல் பேங்கிங் மூலம் 10 ஆயிரம் அனுப்பி உள்ளேன் என கூறியுள்ளார்.

தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது தாய் சித்ரா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதில் எனது மகன் இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடன் பிரச்சனையால் ஆடியோ வெளியிட்டு விட்டு சம்பவத்தன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். எனது மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வேல்முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், ஆனந்தராஜ் ஆகிய 3 பேர் தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் தினேஷ் எழுதி வைத்திருந்த டைரி குறிப்பு மற்றும் அவர் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கந்து வட்டி கொடுமையால் பா.ஜ.க.பிரமுகர் உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News