உள்ளூர் செய்திகள்

விமான நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு

Published On 2023-02-01 02:47 GMT   |   Update On 2023-02-01 02:47 GMT
  • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
  • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

சென்னை

நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News