உள்ளூர் செய்திகள்

சுருக்குமடி வலைக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சுருக்குமடி வலை வைத்திருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மீனவர்களுக்கு நோட்டீஸ்

Published On 2022-07-10 08:17 GMT   |   Update On 2022-07-10 08:17 GMT
  • சுருக்குமடி வலை வைத்திருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மீனவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
  • தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறினர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து நடத்தி வந்தனர்.

மேலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டத்தில் 7- க்கும் மேற்பட்ட கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்த அனுமதிக்க கூடாது. ஆகையால் உடனடியாக தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கடுமையான உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் 60 மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் இருப்பதை கண்டறிந்து அவர்களிடம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கினர். இதில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகளை கடலூர் மாவட்ட எல்லைகளில் நிறுத்தக்கூடாது, மீறி நிறுத்தினால் வலை மற்றும் படகுகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டுமின்றி கடலூர் மாவட்ட கடற்கரையில் போலீசார் உடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ஏறேனும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை நிறுத்தி உள்ளார்களா? என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்களில் பெரும் பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News