உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரின் கிரெடிட் கார்டில் ரூ.1½ லட்சம் மோசடி- வங்கி ஊழியர் கைது

Published On 2022-12-23 10:19 GMT   |   Update On 2022-12-23 10:19 GMT
  • சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான முகமது சித்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • முகமது சித்திக் பல வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் நூதனமுறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போரூர்:

சாலிகிராமம், காந்திநகர், பாரி தெருவை சேர்ந்தவர் தென்னரசு. சாப்ட்வேர் என்ஜினீயர். கடந்த 9-ந் தேதி இவரது 'கிரெடிட் கார்டு' மூலம் 2 தவணைகளாக ரூ.1லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னரசு வங்கிக்கு சென்று விசாரித்தபோது மர்ம நபர் தனது கிரெடிட் கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி பணத்தை நூதனமான முறையில் சுருட்டியது தெரியவந்தது. 

இதுகுறித்து தென்னரசு விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். கோயம்பேடு துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் கவுதமன் உத்தரவின் பேரில் 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான முகமது சித்திக் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் "கிரெடிட் கார்டு" பிரிவில் வேலை பார்த்து வந்ததும், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் மோசடிகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சித்திக் தென்னரசு தென்னரசின் கிரெடிட் கார்டின் விபரங்களை தெரிந்து கொண்டு பணத்தை சுருட்டி உள்ளார். கிரெடிட் கார்டின் நுட்பங்கள் பற்றி நன்கு அறிந்த முகமது சித்திக் இதுபோன்று மேலும் பல வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் நூதனமுறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News