கோவையின் 3 ரோடுகளில் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி
- 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.
- ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும்.
கோவை,
கோவை மாநகரில் அவினாசி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 சாலைகளில் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர போலீசார் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 பிரதான சாலைகளில் அதிநவீன 3டி ஸ்பீட் ரேடார் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும். இதற்கான உரிய ஆவணங்கள் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தானியங்கி வேக கண்காணிப்பு கருவியுடன் காமிராக்கள் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும்.
எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் சென்றால், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு உடனடியாக அபராத ரசீது, இ- செலான் முறையில் அனுப்பி வைக்கப்படும். எனவே கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்