உள்ளூர் செய்திகள்

நகராட்சி பெண் அலுவலர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை

Published On 2023-08-09 15:15 IST   |   Update On 2023-08-09 15:15:00 IST
  • நேற்று காலை விடிந்து எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி, 

தருமபுரி பெரியாண்டிச்சி கோவில் தெரு வள்ளி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தா (வயது38). இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நகராட்சியில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் செல்வம் இறந்து விட்டார். இதனால் வசந்தா தனது குழந்தைகளுடன் தருமபுரியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வசந்தா வீட்டில் தூங்க சென்றார். நேற்று காலை விடிந்து எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நெக்லஸ், 2 பவுன் செயின், 2பவுன் வளையல்கள், 3பவுன் தோடு, 1½ பவுன் 5 மோதிரங்கள் உள்பட 13 பவுன் தங்க நகைகளும், 2 ஜோடி வெள்ளி கொலுசையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வசந்தா தருமபுரி டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் நகராட்சி எழுத்தர் வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News