சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அரியலூரில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறை படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மேற்கொண்டார். இத்திட்டத்திற்கான அரசின் முதல் கட்ட பணிகள் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்நிலையில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மார்ச் மாதத்தில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் அரியலூர் ஜெயங்கொண்டத்தில் துவக்கி வைக்க உள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுற்று சூழல்துறைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அரியலூரில் 7சிமெண்ட் ஆலைகள் உள்ளது. சிமெண்ட் ஆலைகள் மூலம் வசூல் செய்யப்படும் கனிம நிதிகள் மாவட்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பு நீர் ஆதார மேம்பாடு மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தநிதி மற்ற மாவட்டங்களில் அரசின் திட்டங்களுக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள கழுமலை நாதர் திருக்கோவில் குளம் சீரமைத்து சிவ பக்தர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர், ஒன்றிய செயலாளர் மற்றும் நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.