உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-27 11:16 IST   |   Update On 2023-04-27 11:16:00 IST
  • அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

அரியலூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 1.1.2023 முதல் வழங்கவேண்டிய 3 சதவீத அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.ஐ செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்கிட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சரவணசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.வட்டத் தலைவர் து. ஜெயராஜ், துணைச் செயலர் செந்தில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News