நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை
- வீட்டு பின்புறம் மது அருந்தி விட்டு கதவை உடைத்து கொள்ளை
- துாங்கி கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்து சங்கில பறிப்பு
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே ஜெமீன் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன் (50) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு ரேணுகா (40) என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.ரேணுகா நேற்று இரவு வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட்டு இரவு வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலி நகர்ந்து போவது போல் உணர்ந்த ரேணுகா திடுக்கிட்டு எழுந்துள்ளார் அப்போது மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுக்க முற்பட்ட போது தாலி செயினை பிடித்துக் கொண்டு அலறி கத்திய படி போராடி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு பின்பு யாரேனும் வந்துவிடுவார்களோ என்று மர்ம கொள்ளையர்கள் தாலி செயினின் பாதிப்பகுதியோடு பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்பு ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து ஓடி வந்தனர். தாலி செயினை பறிப்பதற்கு முன்பாகவே பீரோவை உடைத்து உள்ளே இருந்த தோடு, சிமிக்கி, வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை பார்த்த பொழுது அது மயக்க நிலையில் கிடந்துள்ளது. கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கு முன்பே வீட்டுக்குப் பின்புறம் மது அருந்திவிட்டு வளர்ப்பு நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து மயக்கம் அடைய செய்து விட்டு சாவகாசமாக வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 3 பவுன் தாலிச் செயின், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.