உள்ளூர் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டம்

Published On 2022-09-04 13:55 IST   |   Update On 2022-09-04 13:55:00 IST
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.

அவர்கள் மருத்துவ சீட்டுகளை பெற்று, டாக்டரிடம் சென்றனர். அப்போது அங்கிருந்த டாக்டர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்காமல், வேறு டாக்டர் வந்ததும் காண்பித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் பொறுமை இழந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் முன்பு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர், அவசர நோயாளிக்கு சிகிச்சை அளித்துவிட்டு, அப்போதுதான் வந்த சூழ்நிலையில் திடீர் மன அயற்சி காரணமாக நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க தயங்கியதாகவும், இது பற்றி உடனடியாக தன்னிடம் சொன்னதால், தான் மருத்துவம் அளிக்க வந்துவிட்டதாகவும் டாக்டர் தட்சிணாமூர்த்தி, நோயாளிகளிடம் தெரிவித்தார்.

இதனால் சமாதானம் அடைந்த நோயாளிகள், டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் நிக்கோலஸ், ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்"

Tags:    

Similar News