ஏ.டி.எம்மில் மோசடி செய்து பணம் திருட்டு
- ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து வாலிபர் பணத்தை திருடி உள்ளார்
- முதியவரின் பணத்தை மோசடி செய்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
அரியலூர்,
அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது65). இவர் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் தனது பணத் தேவைக்காக வி.கைகாட்டி பகுதியிலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றார்.ஆனால் அவருக்கு அதில் பணம் எடுக்க தெரியாததால், வெளியே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை அழைத்து பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார்.அப்போது அந்த வாலிபர் மயில்சாமிக்கு உதவுவது போல் நடித்து, ஏடிஎம்மில் பணம் இல்லை எனக் கூறி, தான் வைத்திருந்த வேறு ஒரு ஏடிஎம் கார்டை மயில்சாமியிடம் மாற்றி கொடுத்துள்ளார்.பின்னர் வீட்டுக்குச் சென்ற மயில்சாமி, தனது மகளிடம் ஏடிஎம் கார்டு மற்றும் கைப்பேசியை கொடுத்துள்ளார்.அதனை பெற்றுக் கொண்ட அவரது மகள், கைப்பேசியில் வந்த குறுச்செய்தியை பார்த்த போது, மயில்சாமி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.10,400 ஏடிஎமில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த மயில்சாமி, இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் மயில்சாமியை ஏமாற்றியது ரெட்டிபாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த அபிமன்யு (வயது 22) என்பது தெரியவந்தது.இதையடுத்து காவல் போலீசார் அபிமன்யுவை கைது செய்தனர்.