- நான்கு பேர் மீது வழக்கு பதிவு
- உடையார்பாளையத்தில் பரபரப்பு
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள கீழகோவிந்தன்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள்கள் சுகன்யா (21), சுந்தரி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது உறவினர் செல்வராஜ் (55). இவர்கள் இருவரது குடும்பத்திற்கு இடையே நில சம்மந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராமமூர்த்தியின் பம்ப் செட்டிற்கு மின்சாரம் வராததால் இது சம்பந்தமாக ராமமூர்த்திக்கும், செல்வராஜுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு ராமமூர்த்தியின் வீட்டிற்கு வந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்களான சௌந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரும் ராமமூர்த்தி எங்கே என்று கேட்டுள்ளனர்.ராமமூர்த்தி வீட்டில் இல்லை என்று சுந்தரி கூறியுள்ளார். பின்பு ராமமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது சுந்தரி மற்றும் அவரது அக்கா சுகன்யா ஆகிய இருவரும் ஏன் எங்களது தந்தையை ஏன் திட்டுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சுந்தரி, சுகன்யா ஆகிய இருவரையும் செல்வராஜ், சௌந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுந்தரி மற்றும் சுகன்யா இருவரும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் சுந்தரி அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மலரழகன் 2 பெண்களை தாக்கிய செல்வராஜ் உள்ளிட்ட நான்கு பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.