மகா மாரியம்மன் கோவில் அம்மன் நகைகள் கொள்ளை
- மகா மாரியம்மன் கோவில் அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உண்டியல் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள புக்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சிந்தனைச்செல்வன் சென்று உள்ளார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்றபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தாலி குண்டு, சன்னதிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கோவில் முன்பு கூடினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.