உள்ளூர் செய்திகள்

உரிமமின்றி மரக்கன்றுகள் விற்றால் நடவடிக்கை

Published On 2022-12-13 14:07 IST   |   Update On 2022-12-13 14:07:00 IST
  • உரிமமின்றி மரக்கன்றுகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில்

அரியலூர்:

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் பெறாமல் காய், கனி மரக்கன்றுகள், நாற்றுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற 70 நர்சரிகள் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான முந்திரி, மா, பலா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, தென்னங்கன்றுகள் மற்றும் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் நாற்றுகள் வாங்கும் போது அரசு அங்கீகாரம் பெற்ற நர்சரி பண்ணைகளில் மட்டுமே வாங்க வேண்டும். நர்சரி பண்ணையாளர்கள் காய்கறி நாற்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது அதற்குரிய ரசீது வழங்க வேண்டும்.

கன்றுகள் இருப்பு விபரங்களை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக கணக்கு பராமரிக்க வேண்டும். அரசு விதை உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள் மற்றும் நாற்றுகள் விற்பனைச் செய்தால் விதைகட்டுப்பாட்டு ஆணையின் படிஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News