சேலத்தில் 103.3 டிகிரி வெயில் பதிவு
- சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவான நிலையில் பின்னர் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
இந்தநிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 101.1 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 103.3 டிகிரி பதிவானது. இது நடப்பாண்டில் உச்ச பச்ச வெயில் பதிவாகும். இதனால் வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிக அளவில் இருந்தது. சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தொப்பி அணிந்த படியும், குடைகள் பிடித்த படியும் பொதுமக்கள் சாலைகளில் சென்றனர். மேலும் தாகத்தை தணிக்க இயற்கை மற்றும் செயற்கை குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.