துடியலூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது
- இவர், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மேட்டுப்பாளையம் சாலையில் வந்த போது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார். அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன் (43) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.
வழக்கு பதிவு செய்த போலீசார் பழனிநாதனை கைது செய்தனர். தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரரே இது போன்று செயின் பறிப்பில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.