உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே சாம்பார் சாதம் சாப்பிட்ட 8 வயது சிறுமி பலி

Published On 2023-07-02 07:21 GMT   |   Update On 2023-07-02 07:21 GMT
  • வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
  • நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னாங்காரனை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ரேணு காதேவி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 8), மகன் தக்ஷி (5). பிரிய தர்ஷினி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி வீட்டில் சாம்பார் சாதம் தயார் செய்தார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து பிரியதர்ஷினியை ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினிக்கு நேற்று அதிகாலை மீண்டும் வாந்தி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட சாம்பார் சாதம் உயிரை பறித்து இருப்பது தெரியவந்தது.

வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உணவு எப்படி சிறுமியின் உயிரை பறித்தது என்பது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News