உள்ளூர் செய்திகள்

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி வெற்றி

Published On 2023-05-28 09:17 GMT   |   Update On 2023-05-28 09:17 GMT
  • மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
  • இந்த போட்டிகளில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.

கோவை,

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-வது ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. கோப்பை கூட்டைப்பந்து போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்துக்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.

இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.

இதன் ஒருபகுதியாக ஆண்கள் பிரிவின் முதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை வருமானவரி அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் வருமானவரி அணி 78-57 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா அணி 82-72 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவுக்கான முதல் போட்டியில் மும்பை மத்திய ரெயில்வே அணியை எதிர்த்து, கோவை மாவட்ட கடைப்பந்து அணி விளையாடியது. இதில் மத்திய ரெயில்வே அணி 83-48 எனற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து, சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்வாரிய அணி 75- 32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும் மோதின.

இதில் கேரளா போலீஸ் அணி 66-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு போட்டிகள் நடந்தன. 

Tags:    

Similar News