உள்ளூர் செய்திகள்

ஐகோர்ட்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல்முறையீடு

Published On 2022-06-22 18:18 GMT   |   Update On 2022-06-22 18:21 GMT
  • பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
  • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

சென்னை:

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்த பர

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News