அரிவாளுடன் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள் கேட்டு டாஸ் மாக் ஊழியர்களை மிரட்டிய வாலிபர் கைது
- அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ராயபுரம் பகுதியை சேர்ந்த சேல்ஸ்மேன் கார்த்திகேயன் மற்றும் ஒரு ஊழியர் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரிவாளுடன் கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் கொடுக்கும்படி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அப்போது ஊழியர்களை பார்த்து அவர் அரிவாளால் வெட்ட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாரில் பணியாற்றிய ஊழியர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பதும் குடிக்க பணம் இல்லாததால் அரிவாளை காட்டி மிரட்டி மது கேட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.