குப்பைகள் கொட்டுவதை தடுக்க நயினார்குளத்தில் கம்பி வேலி அமைக்க வேண்டும்- மேயரிடம் மனு
- சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
- கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர். ராஜூ, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த நயினார்குளம் நீர்ப்பாசன உதவி செயலாளர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், நயினார் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய டவுன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகில் குடியிருப்போர் அங்கு குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அதனை தடுக்கும் விதமாக அங்கு டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். கொக்கிரகுளம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் இளங்கோவடிகள் தெரு, 14 வார்டு அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.