கூடலூர் அருகே தொழிலாளியின் வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை
- காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
- யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே அரசு தேயிலைத் தோட்ட கழகத்தையொட்டிய பாண்டியாறு 4பி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
அப்படி வரும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தேவாலா அட்டி பகுதியில் குடியிருப்புகளை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு அரசு தேயிலைத் தோட்டம் பாண்டியாறு எண். 4பி பகுதியில் நுழைந்தன.
பின்னர் தொழிலாளி புவனேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்து சேதம் செய்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். சம்பவம் குறித்து தொழிலாளர்கள் டேன்டீ நிறுவாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.