உள்ளூர் செய்திகள்

கூடலூரில் வீட்டை உடைத்த காட்டு யானை

Published On 2022-08-08 10:12 GMT   |   Update On 2022-08-08 10:12 GMT
  • கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
  • வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது.

கூடலூர்

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

இவரது மனைவி முத்துலட்சுமி. தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டது.

சிறிது நேரத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டின் மறுபுறம் வழியாக வெளியேறி தப்பி ஓடினார்.

தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பாக்கு மரங்கள் சேதம் இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து ஊருக்குள் காட்டு யானை வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல், ஒற்றவயல் உள்ளிட்ட இடங்களில் தோட்டத்துக்குள் புகுந்து விநாயகன் காட்டு யானை நேற்று பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல மாதங்களாக பயிர்கள், வாகனங்களை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News