உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியது- டிரைவர் பலி

Published On 2023-03-21 15:25 IST   |   Update On 2023-03-21 15:25:00 IST
  • ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
  • மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலாம்பூர்,

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த இளம்வழுதி (52) என்பவருடன் கேரளா நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

ஆட்டோ எல்.அண்ட்.டி. பைபாஸ் ரோட்டில் குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இளம்வழுதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்தும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகிறார்கள்.

காரமடை தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தை சேர்ந்தவர் மிதுன் (20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சந்துரு, நிதின்குமார் ஆகிய மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டி சென்றார்.

மோட்டார் சைக்கிள் கணுவாய்பாளையம் - பத்திரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது திடீரென மோடடார் மீது மான் மோதியது. மான் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, நிதின்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News