உள்ளூர் செய்திகள்

கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2023-01-07 14:50 IST   |   Update On 2023-01-07 14:50:00 IST
  • சண்முகவேல் உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார்.
  • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

கோவை,

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ஏ. நாகூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முகவேல் மற்றும் பூசாரி மோகன்ராஜ் கோவிலில் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் அதிகாலை வழக்கம் போல சண்முகவேல் கோவிலை திறக்க வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து சண்முகவேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவிலுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உச்சி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் (19) என்பதும், அவர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3100-யை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News