கோவையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்
- 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
- போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கோவை பேரூர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு வந்தார்.
அப்போது சிறுமிக்கு முள்ளங்காடு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் தினேஷ் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமியை கவனிக்க யாரும் இல்லாததால் தினேஷ் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர் தனது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது ஆகி விட்டது என கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.