உள்ளூர் செய்திகள்

தடாகம் வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி? போலீசார் விசாரணை

Published On 2023-08-27 14:45 IST   |   Update On 2023-08-27 14:45:00 IST
  • மேல்முடி தண்ணீர்பாறை பகுதியில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
  • போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை,

கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள மேல்முடி தண்ணீர்பாறை பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த வன ஊழியர்கள் இது குறித்து வன அதிகாரிகள் மற்றும் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வன அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர்.

அப்போது வாலிபரின் கழுத்து, வலது கை ஆகிய இடங்களில் சிறுத்தை தாக்கியதற்கான காயங்கள் இருந்தது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுகசூர்யா என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் சிறுத்தை தாக்கி அவர் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News