உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே அரசு பள்ளிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை

Published On 2024-11-20 10:07 IST   |   Update On 2024-11-20 10:07:00 IST
  • பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
  • மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.

நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.

பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.

யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.

சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News