கோவையில் தனியார் பாரை இடமாற்றம் செய்ய வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. சோமையன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், சோமையன்பாளையம்-கவுண்டர்மில் ரோடு அருகே தனியார் பார் ஒன்று உள்ளது.இந்த பாரால் மக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். பள்ளிக்கூட குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். பாரில் குடித்துவிட்டு குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.
எனவே போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் பாரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சூலூர் பகுதி ஊர் மக்கள் அளித்துள்ள மனுவில், சூலூர் கண்ணம்பாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு விடுமுறைகளை கடைபிடிக்காமல் டாஸ்மார்க் கடை ஒன்று திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இப்பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்றனர்.