உள்ளூர் செய்திகள்

டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.

டிரோன் மூலம் மருந்து தெளித்து ஆகாயத்தாமரை அழிக்கும் பணி

Published On 2022-09-27 10:24 GMT   |   Update On 2022-09-27 10:24 GMT
  • வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் சாகுபடி வயல்கள் மூழ்க வாய்ப்புள்ளது.
  • வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும்.

திருத்துறைபூண்டி:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால் என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு வடிகால் உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது.

அதேபோல் இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என நான்கு வடிகாலும் குன்னலூர் எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.

இந்நிலையில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் ஆறுகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. மேலும், கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் கிராமங்கள் மற்றும் சாகுபடி வயலும் மூழ்க வாய்ப்புள்ளது.

எனவே, வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஊராட்சி செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்தனர்.

இதில் ஊராட்சி செலவில் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் முதற்கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது.

இது விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News