மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
- கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா. நல்லூர் அருகே பீச்சப்பாளையம் அருந்ததியர் காலணியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (வயது 55). இவரது மகன் நிர்மல் குமார்(27).
இவர் நேற்று மாலை கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பொருட்களை வாங்கிக் கொண்டு பரமத்தி-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கந்தம்பா ளையத்தில் உள்ள மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த நிர்மல் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நிர்மல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லமுத்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குப்பம் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய சரவணக்கு மாரை தேடி வருகின்றனர்.