உள்ளூர் செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7 வயது சிறுவன் பலி

Published On 2023-06-19 14:40 IST   |   Update On 2023-06-19 14:40:00 IST
  • ஆற்றைக் கடக்க முயன்றபோது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார்.
  • சுமார் 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனின் உடல் சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி கண்டெடுக்கப்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பண்ணந்தூர் கிராமத்தில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

செல்ல க்குட்டப்பட்டி கிராமத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பண்ணந்தூர் கிராமத்திற்கு தென்பண்ணை ஆற்றை கடந்து தினமும் சென்று வருவது வழக்கம். சில சமயங்களில் இவரது மகன் ரிஷிதரன் (7) அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ஆற்றில் கூடுதலாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தினமும் ஆற்றைக் கடந்து செல்லக்கூடிய சகாதேவன் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்றை சுற்றி தனது கடைக்குச் சென்றுள்ளார்.

தந்தை கடைக்கு அழைத்துச் செல்லாத காரணத்தால் வழக்கம் போல் நேற்று முன்தினம் ரிஷிதரன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த காரணத்தால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையல், நேற்று காலை முதல் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது.

சுமார் 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனின் உடல் சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக செல்ல குட்டப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

Similar News