கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 8 லாரிகள் பறிமுதல்
- தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கற்களை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
- சுரங்கத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கோவை,
தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் சுரங்க துறை உதவி புவியியலார் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள், அந்த வழியாக உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
வாளையார் சோதனை சாவடியில் சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 8 லாரிகளை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.